சென்னையில் சித்த மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட நோயாளி அடுத்த 10 நிமிடத்திலேயே பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எனவே சித்த மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் பெருமாள்(50) என்பவர் சொந்தமாக சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். சித்த மருத்துவம் படித்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆங்கில வழி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த முதியவர் ராஜேந்திரன் (70) என்பவருக்கு, திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சித்த மருத்துவரான பெருமாளிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது பெருமாள் அவருக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே பூந்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த ராஜேந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்த மருத்துவம் படித்த பெருமாள் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.