பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னையில் மூன்று இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனை நிறைவு பெற்றது. இதில் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீஸார், தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக ஷிலிப்பர் செல்களாக செயல்பட்ட இரண்டு பேர் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அபுதாஹீர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர். பெங்களூருவில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்ற தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் அபுதாஹீரின் செல்போனை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ராயப்பேட்டையில் லியாகத் அலி என்பவர் வீட்டிலும் நான்கு மணி நேரம் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. அவரது செல்போனையும் என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வண்ணாரப்பேட்டையில் ரஹீம் என்பவர் வீட்டில் என்ஐஏ சோதனை நிறைவு பெற்ற நிலையில் மூன்று பேரை பெங்களூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகமாறு சம்மன் அளித்து சென்றதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.