சங்கரன்கோவிலில் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த ஓட்டுநர் முருகன் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணி வழங்கும்படி தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூரை சேர்ந்த முருகன், கடந்த 8ம் தேதி அன்று வேனில் சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக மக்களை வேனில் அழைத்துச் சென்றார். சங்கரன்கோவிலில் வேன் சென்று சென்றுக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனம் மீது லேசாக மோதியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், ஓட்டுநர் முருகனை தாக்கியதாகவும், அதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, கணவரின் இறப்புக்கு இழப்பீடுகோரி அவரது மனைவி மீனா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், போலீஸ் காவலில் எனது கணவர் முருகன் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவர் மரணத்திற்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், உயிரிழந்த ஓட்டுநர் முருகன் மனைவிக்கு, கிராம உதவியாளர் பணியிடம் காலியாகும் வரை அங்கன்வாடி பணியாளர் பணி வழங்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் உயிரிழந்த வழக்கை நெல்லை மாவட்ட சிபிசிஐடி எஸ்பி கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!
எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!