அதிர்ச்சி... போதையில் நண்பனை அடித்தே கொன்ற இளைஞர்கள்!


அடித்து கொல்லப்பட்ட அருண் கார்த்திக்

பொள்ளாச்சியில் குடிபோதையில் வாலிபர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் வாலிபர் அடித்துக் கொலை

பொள்ளாச்சி நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் அருண்கார்த்திக் (25). இவர் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் இவரது பெற்றோர் கடந்த 13ம் தேதி இது குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அருண்கார்த்திக்கின் நண்பர்களான சந்திராபுரத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அவர்களுக்கு அருண்கார்த்திக் குறித்த தகவல் ஏதும் தெரியாது என கூறியதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் விடுவித்தனர். இந்நிலையில் அருண்கார்த்திக்கின் செல்போனை ஆய்வு செய்த போது, அது கடைசியாக சந்திராபுரம் பகுதியில் இருந்ததை உறுதி செய்தது. இதையடுத்து விடுவிக்கப்பட்ட இருவரை அள்ளி வந்த போலீஸார் அவர்களிடம் தங்கள் முறையில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அருண்கார்த்திக், சூர்யபிரகாஷ், அரவிந்த் மூவரும் நண்பர்கள் என்பதும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேச வேண்டும் என கூறி அருண்கார்த்திக்கை மற்ற இருவரும் அழைத்து சென்று மது அருந்தியுள்ளனர்.

மது போதை தலைக்கேற மூவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சூர்யபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்து அருண்கார்த்திக்கை தாக்கியுள்ளனர். இதில் அருண்கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் அருண்கார்த்திக் உடலை அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி கழிவுகளுக்கிடையே புதைத்து விட்டு தப்பியுள்ளனர் என்ற விவரமும் வெளிவந்தது.

இதையடுத்து மோப்பநாய் மற்றும் தடவியல் ஆய்வு சோதனைக்கு பின் இருவரையும் கைது செய்த போலீஸார் உயிரிழந்த அருண்கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மது போதை மயக்கத்தில் நெருங்கிய நண்பனையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x