எஸ்.ஐ என இன்ஸ்டாகிராமில் பொறியியல் படித்து வரும் கல்லூரி மாணவியுடன் பழகி, மாணவியை நிர்வாணப் புகைப்படம் எடுத்து அதைக்காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யெமனூரா(22). இவர் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவியோடு இன்ஸ்டாகிராமில் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். அப்போது மங்களூருவின் புறநகரில் உள்ள வாமஞ்சூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணிபுரிவதாக யெமனூரா கூறியுள்ளார். இதன் பின் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவி, யெமனூராவை இந்த ஆண்டு மே மாதம் மங்களூருவில் உள்ள கத்ரி ஸ்ரீ மஞ்சுநாதா கோயிலில் சந்தித்துள்ளார். இதன் பின்னர் அவர்கள் பழக்கம் நெருக்கமாகியுள்ளது. அதே வாரத்தில் தண்ணீர்பாவி கடற்கரைக்கு மாணவியை அழைத்துச் சென்று நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
தன் ஆசைக்கு இணங்காவிட்டால், இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று யெமனூரா மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் மாணவியின் நிர்வாணப் புகைப்படங்களை அவரது குடும்பததினருக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த புகைப்படங்களை நீக்க வேண்டுமென்றால், 1.5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மாணவியை யெமனூரா மிரட்டியுள்ளார். இதுகுறித்து மங்களூர் மகளிர் காவல் நிலையத்தில் பொறியியல் கல்லூரி மாணவி புகார் செய்தார். இதையடுத்து யெமனூரா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 354டி, 376, 384, 506, 170 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67ஏ பிரிவின் கீழ் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் லோகோஷ் ஏசி தலைமையிலான போலீஸார், யெமனூராவை நேற்று கைது செய்தனர்.மங்களூரு காவல் ஆணையர் குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில், " மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை யெமனூரா ஒப்புக் கொண்டுள்ளார். அவர் ஒரு தெரு நாடகக்கலைஞர். அவரிடமிருந்து காவல் துறை சீருடை மீட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் நம்பிக்கையைப் பெறவும், அவளை ஏமாற்றவும் இந்த சீருடையை அவர் பயன்படுத்தியுள்ளார்" என்றார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் யெமனூரா ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.