வாணியம்பாடியில் சூப்பர் மார்க்கெட் முன்பு மதுபானம் அருந்தக்கூடாது என உரிமையாளர் கூறியதால் ஆத்திரமடைந்த இரண்டு பேர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதி சேர்ந்தவர் சவுகத் அலி. இவர் அதேபகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அவரது கடை வளாகத்திற்கு வெளியே அமர்ந்திருந்த இரண்டு பேர், அங்கு மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனைக் கண்ட சவுகத் அலி, அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி கடை முன் அமர்ந்து மது அருந்தக் கூடாது என கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இரண்டு பேரும் அங்கிருந்து சென்றனர். பின்னர் மீண்டும் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த அவர்கள் கைகளில், பெட்ரோல் நிரம்பிய மதுபாட்டிலை வைத்திருந்தனர்.
அதை பற்ற வைத்து, கடை மீது வீசிவிட்டு தப்பி சென்று தலைமறைவாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சவுகத் அலி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபானம் அருந்தக்கூடாது என கடை உரிமையாளர் கூறியதற்கு கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...