போலி ஆதார் மூலம் ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: தில்லாலங்கடி திருப்பூர் பெண் மீது வழக்கு!


குற்றம்சாட்டப்பட்ட ஊர்மிளா ஸ்ரீதர்

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகியோருக்கு, கணக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு வழங்கியது.

இந்த நிலத்தை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இவர்களது நிலத்திற்குப் பக்கத்து நிலத்திற்கு சொந்தக்காரர் ஊர்மிளா ஸ்ரீதர். இவர் நடிகர் சத்யராஜின் உறவினர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊர்மிளா இந்த நாலுபேரிடமும், அவர்களது நிலத்தை விலைக்கு கேட்டுள்ளார். ஆனால், நால்வரும் நிலத்தை விற்பனை செய்ய மறுத்ததாக தெரிகிறது.

அதனையடுத்து, நாலு பேரது நிலங்களையும் போலியான ஆவணங்களைத் தயாரித்து, ஊர்மிளா ஸ்ரீதர் தனது பெயரில் பதிவு செய்து மோசடி செய்துள்ளதாகக் கூறி ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்த ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம்

இதன் தொடர்ச்சியாக தற்போது புகாரின் அடிப்படையில் ஊர்மிளா ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து தங்களது நில ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி, மீண்டும் மற்றொரு மனுவினை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஏற்கெனவே இறந்து போனவர்களின் ஆதார் அட்டைகளின் மூலமாக எங்களது ஆதார் அட்டைகளைப் போலியாகத் தயாரித்து விவசாயம் செய்வதற்காக அரசு எங்களுக்கு வழங்கிய நிலங்களைத் தனது பெயருக்கு ஊர்மிளா ஸ்ரீதர் ஆவணமாற்றம் செய்துள்ளார்" என்று புகார் செய்தனர்.

மேலும், ஒருவருக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஆவணப்பதிவு செய்து, தனது பெயருக்கு மாற்றம் செய்து, இந்த மோசடியில் ஈடுபட்ட ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்மிளா ஸ்ரீதரிடம் உள்ள தங்களது நிலத்திற்கான போலி ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x