பெண் கத்தியால் குத்திக் கொலை… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!


திருப்பூர் பெண் கொலை

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1ம் தேதி நடுத்தர வயது பெண்ணை, ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணேசன் (52) என்பதும் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. திருமணமாகாத இவருக்கு, அதேபகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பவளக்கொடி (எ) சாந்தி (48) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த கோவில்வழி பகுதியில் குடியமர்த்திய கணேசன் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடி சாந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சாந்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்து ஆத்திரமடைந்த கணேசன் கடந்த 1ம் தேதி இரவு திருப்பூருக்கு வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியதாக வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கணேசனை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x