போலி கல்விச் சான்றிதழ்களால் பதிவாளர் அதிர்ச்சி... தெலங்கானா பெண் கைது!


ஆயிஷா தன்வீர்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பதிவு செய்ய முயன்ற தெலங்கானா பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காமராஜர் என்பவர் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார் ‌. இந்நிலையில் நேற்று மாலை தெலங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மருத்துவப் படிப்பு முடித்த சான்றிதழ்களைப் பதிவு செய்ய வேண்டி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது பதிவாளர் டாக்டர் காமராஜர் அந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தார். அப்போது அது போலி கல்விச் சான்றிதழ் என தெரியவந்தது. உடனே பதிவாளர் காமராஜர் சந்தேகமடைந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், எம்.டி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படித்ததாகவும் பின்னர் தெலங்கானா சென்று விட்டதால் பதிவு செய்ய முடியாமல் போனது என்றும், இன்று பதிவு செய்ய வந்ததாக தெரிவித்துள்ளார்.

கைது

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காமராஜர் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிஷா தன்வீர்( 50) என்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி போலீஸார், ஆயிஷா சமர்ப்பித்த கல்விச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி விசாரித்த போது அது போலி எனத் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ஆயிஷா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஆயிஷாவிடம் போலிச் சான்றிதழ் எப்படி கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

x