உப்புமாவில் விஷம் வைத்து தனது மனைவியை கொலை செய்த கணவர், அதுகுறித்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம். முளகுமூடு பகுதியை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின்(34). பொறியாளரான இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தனது மனைவி திவ்யா சில்வெஸ்டரை உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
இவர் பிணையில் வந்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மனைவியை கொன்ற வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் பெல்லார்மின் வீட்டின் அறையை விட்டு வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த பெற்றோர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெல்லார்மின் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீஸார் நடத்திய விசாரணையில் பெல்லார்மின் மனைவி திவ்யா சில்வெஸ்டரை ஆன்லைனில் விஷம் வாங்கி உப்புமாவில் கலந்து கொடுத்த கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ளது.
இந்த வழக்கில் தந்தை பெர்மான்ஸ், தாய் அமலோற்பம் ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற விசாரணைக்குப் பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.