அதிர்ச்சி வீடியோ! மதுபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு


பேருந்து கண்ணடியை உடைத்த நபர்

மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தை எடுக்கக் கூடாது என வாக்குவாதம் செய்ததோடு, பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்த மது பிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கொரக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குரு. கூலித்தொழிலாளியான இவர் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கூவம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.

கண்ணாடி சிதறல்கள்

இந்நிலையில், மது போதையில் வந்த குரு பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தை இங்கிருந்து எடுக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து குறுக்கே இருந்த இருசக்கர வாகனத்தை இடிக்காமல் இடது புறமாக பேருந்தை ஓட்டுநர் எடுக்க முயன்ற போது, நான் வண்டியை எடுக்காதன்னு சொன்னபிறகும் வண்டியை எடுக்குறியா என கேட்டு ஆத்திரமடைந்த குரு அருகே இருந்த கட்டையை எடுத்து சென்று பேருந்து முன் பக்க கண்ணாடி, ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த கண்ணாடி, பின்பக்க கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி என அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்தார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் உறைந்து போயினர்.

இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, அது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்த குரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

x