பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரும் ஆசிரியையும் மாயமான வழக்கில் ஆசிரியர் வெங்கடேசன் மூன்று மாதம் கழித்து இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் வேப்பந்தட்டையை சேர்ந்த தீபா. கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி இருவரும் பள்ளி நேரத்திற்குப் பின்பு மாயமானார்கள்.
இது தொடர்பாக ஆசிரியை தீபாவின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீஸாரும், ஆசிரியர் வெங்கடேசனின் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாயமான ஆசிரியர்கள் இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தான் அவர்கள் இருவரும் மாயமாகி உள்ளனர். இதனை அடுத்து மாயமான இருவரையும் தீவிரமாக போலீஸார் தேடி வந்தனர்.
டிசம்பர் 1-ம் தேதி கோவை உக்கடம் பகுதியில், காணாமல் போன ஆசிரியை தீபா பயன்படுத்திய கார் கேட்பாரற்று நின்று கொண்டு இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று காரை சோதனையிட்டதில் காரினுள் ரத்தக்கரை படிந்த சுத்தியல், ஆசிரியை தீபாவின் கொலுசு மற்றும் செல்போன் ஆகியவை இருந்தன.
இவற்றைப் பெரம்பலூர் போலீஸார் கைப்பற்றினர். இருப்பினும் ஆசிரியை தீபாவின் நிலை குறித்து எந்தத் தகவலும் சிக்காமல் இருந்தது. ஆசிரியர் வெங்கடேசன் சிக்கினால் தான் அதுகுறித்த விவரங்கள் தெரியவரும் என்ற நிலையில் போலீஸார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஆசிரியர் வெங்கடேசனின் மனைவி காயத்ரி உள்ளிட்ட அவர்களது உறவினர்கள் மூவரை குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி போலீஸார் கைது செய்தனர்.
இதன் பிறகும் வெங்கடேசன், தீபா குறித்து எந்தத் துப்புக் கிடைக்காமல் இருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் ஆசிரியர் வெங்கடேசன் பதுங்கி இருப்பதாகப் பெரம்பலூர் தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைுயடுத்து அங்கு சென்ற போலீஸார், வெங்கடேசனை நேற்று மாலை கைது செய்தனர்.
தற்போது அவரை பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே ஆசிரியை தீபா என்ன ஆனார் என்பது குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது. போலீஸ் கையில் சிக்காமல் 3 மாத காலமாக தண்ணி காட்டி வந்த ஆசிரியர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!