சென்னை தங்கச்சாலை மேம்பாலம் அருகே, மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னை வள்ளலார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்ற 48 சி என்ற தடம் எண் கொண்ட பேருந்து தங்கச்சாலை மேம்பாலம் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்தின் ஓட்டுநர் பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியுள்ளனர். நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பெண் பயணி ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கச்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.