திருமணமான ஆறே மாதங்களில் ஒரே நாளில் கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (37). இவர் அசோக் நகர் 1-வது அவன்யூவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவருக்கும், வாணியம்பாடியைச் சேர்ந்த தேன்மொழி (30) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் சென்னையில் ஒன்றாக வசித்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் வாணியம்பாடியில் அருண்குமாரின் தம்பி ராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. இதற்காக அருண்குமாரும், அவரது மனைவி தேன்மொழியும் வாணியம்பாடி சென்றுள்ளனர். அங்கு தேன்மொழி சில நாட்கள் தனது தாய் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் தனது மனைவி தேன்மொழியை வாணியம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு அருண்குமார் சென்னை வந்துள்ளார். இதன்பின் அவர் பல நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அருண்குமாருடன் பணியாற்றி வரும் லோகேஷ் என்பவர் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது போன் எடுக்காததால் அருண்குமார் தாயாரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அருண்குமார், சென்னை வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த லோகேஷ் கடந்த இருநாட்களாக அசோக் நகரில் உள்ள அருண்குமாரின் வீட்டிற்குச் சென்று பார்த்ததுடன் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும் அருண்குமாரை கண்டுபிடிக்க முடியாததால், இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் லோகேஷ் நேற்று புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீஸார் நேற்று இரவு அருண் குமாரின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீஸார், அருண்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டதுடன் கதவை நீண்ட நேரம் தட்டியுள்ளனர். ஆனால் அருண் போன் எடுக்காமல் கதவையும் திறக்காததால் சந்தேகமடைந்தனர். இதனால், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலைப் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அருண்குமாரின் மனைவிக்கும், தாய் , தந்தைக்கு போலீஸார் போன் செய்துள்ளனர். அப்போது அருண்குமாரின் மனைவி தேன்மொழியும் வாணியம்பாடியில் உள்ள அவரது தந்தை வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். தேன்மொழி தற்கொலை செய்து கொண்டது குறித்து வாணியம்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதும் தெரிய வந்தது.
ஒரே நேரத்தில் கணவன் சென்னையிலும், மனைவி வாணியம்பாடியிலும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?
இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!