ரூ.1.21 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்... சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி!


சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாகர்கோயில் இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1,21,000 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று மாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் சார்பதிவாளர் ஆண்ட்ரூ என்பவரின் இருசக்கர வாகனத்தில் புரோக்கர்கள் மூலம் இரண்டு கட்டுகளாக கொடுக்கப்பட்ட ரூ.60,000 ரூபாய் ரொக்கம், கணினி அறையில் 7,500 ரூபாய் ரொக்கம், மற்றும் சார்பதிவாளருக்கு கொடுக்க கொண்டு வந்த 42,000 ரூபாய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதனை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் கூடுதலாக எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, யார் யார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் இன்று தெரியவரும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்காணித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

x