தனது 7 வயது மருமகனை ஏரியில் தள்ளிக் கொலை செய்த வாலிபர், அதே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம், போபாலில் உள்ள ஜஹாங்கிராபாத் சிக்லோட் சாலையில் வசித்தவர் கேசர் தாஜ்(25). நேற்று மாலை இவர் தனது 7 வயது மருமகனை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்குச் செல்லாமல், கட்லாபுராவில் உள்ள புர்ஜ் என் இடத்தில் உள்ள ஏரிக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின் அந்த ஏரிக்குள் சிறுவனை தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்ணீருக்குள் விழுந்த அந்த சிறுவன் தத்தளித்துள்ளான்.
அப்போது அவ்வழியே சென்ற ஒருவர், எதற்காக சிறுவனை ஏரியில் தள்ளி விட்டீர்கள் என்று கேட்டதற்கு, கேசரும் ஏரியில் குதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர், இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சில மணி நேரத்தில் சிறுவன் மற்றும் கேசர் தாஜ் ஆகியோரின் உயிரற்ற உடல்களையே அவர்களால் மீட்க முடிந்தது.
இதையடுத்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கேசர் தாஜ், தனது 7 வயது மருமகனை கடத்திச் சென்று ஏரியில் தள்ளிக் கொலை செய்தது தெரிய வந்தது. வழிப்போக்கர் கேட்டதால், கேசரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
கேசர் தாஜ் மனநிலை சரியில்லாதவர் என்றும், அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்ததது. சொத்து தொடர்பாக தனது தந்தையுடன் நீண்ட காலமாக அவருக்கு பகை இருந்ததாகவும், கடந்த ஆண்டு அவர்து தந்தையைத் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கேசரின் மனைவி ஐஷ்பாக்கில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு மகனுடன் இடம் பெயர்ந்துள்ளார்.
தனது மகனைப் பிரிந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்த கேசர் தாஜ், தனது 7 வயது மருமகனைக் கொலை செய்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் கேசரின் உடலை வீட்டுக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். 7வயது சிறுவனைக் கொன்று வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் போபாலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.