இஸ்ரேல் -ஹமாஸ் குழுவினர் இடையே 11வது நாளாக போர் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான ஒசாமா அல் மசினி உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால், கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வகையில் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான ஒசாமா அல் மசினி உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி.
இவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வரப்படுபவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.