வேறு சாதி வாலிபரை காதலித்த ஆத்திரத்தில் பெற்ற மகளையே அவரது தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா(20) உள்பட 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுநாத்தின் இரண்டாவது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் அவர் கடந்த 10ம் தேதி, தனது காதலனுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து இளம்பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அவரது மூத்த மகள் கவனா, தானும் வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார். மேலும் காதலை கைவிடுமாறு கூறி வாக்குவாதம் செய்தார். எனினும் கவனா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலையில் கவனாவுக்கும், அவரது தந்தை மஞ்சுநாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார். அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
உடனே போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கவனாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து மஞ்சுநாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆணவக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.