மதுபான பாரில் மோதிய முக்கிய பிரமுகர்களின் மகன்கள்! பெண் விவகாரத்தில் நடந்த சண்டை


சென்னையில் உள்ள மதுபான பாரில் பெண் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பிரபல நாளிதழின் நிர்வாக இயக்குநர் மகன் மற்றும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மகனுக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை அபிராமபுரம் சேமியர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பிரபல நாளிதழின் நிர்வாக இயக்குநரின் மகனான கொட்டிவாக்கத்தை சேர்ந்த சிவிராவில்லா(29) மற்றும் பிரபல பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர் (பாஷ்யம்) மகனான கிண்டியை சேர்ந்த அமர்நாத்(29) ஆகியோர் பெண் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அதே பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த முன்னாள் திரைப்பட தயாரிப்பாளரின் மகனான ஜிவ்தேஷ் என்பவருக்கும் சிவிராவில்லாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே பாரிலிருந்த ஊழியர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜிவ்தேஷ் தனது நண்பர்களான சுதர்சனன், வினோத், ரோஷித்வாமா, பகத் ஆகியோரை அழைத்து வந்து சிவிராவில்லா மற்றும் அமர் நாத் ஆகிய இருவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த மோதலில் சிவிராவில்லா மற்றும் அமர்நாத்திற்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் நடத்திய விசாரணையில் பெண் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து முக்கிய பிரமுகர்களின் மகன்களை தாக்கிய ஜிவ்தேஷ், சுதர்சனன் உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அடிதடி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் முக்கிய புள்ளிகளின் மகன்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x