சிறுமிக்கு பாலியல் தொல்லை: தென்காசி பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு


தென்காசி மாவட்டம், சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (58).‌ தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டுக்கு சென்றபோது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் இருந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமிக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி, உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவின்பேரில் 3 பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x