வீடியோகாலில் சிபிஐ அதிகாரி போலபேசி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி முத்துப்பேட்டை மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீரா உசேன் (82). மருத்துவரான இவர், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அவரது செல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை மும்பை சிபிஐ போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு, ‘‘உங்கள் மீது போதைப் பொருள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளோம். உங்களது ஆதார், பான்கார்டு எண்களை அனுப்புங்கள்" என தெரிவித்துள்ளனர்.
இதனால், அச்சமடைந்த மீரா உசேன், தான் ஒரு மருத்துவர் என்றும், எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், ‘‘இந்த அழைப்பை துண்டிக்காமல், உடனடியாக நீங்கள் ரூ.2 கோடி பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், நாங்கள் நேரில் வந்து உங்களை கைது செய்ய நேரிடும் என்று கூறியுள்ளார்.
இதனால் பயந்த மீரா உசேன், தனது வங்கிக் கணக்கிலிருந்து, வீடியோகாலில் பேசியவர் கூறிய 2 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.55 லட்சம் மற்றும் ரூ.64 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். இந்நிலையில், அந்த கும்பல் மறுபடியும் போன் செய்தபோது சுதாரித்துக் கொண்ட மீரா உசேன், இது குறித்து திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் மே 14ம் தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(25), பெனட்ரிக் ராஜா(27) ஆகிய இருவரும் மோசடிக்காரர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர், இருவரிடமும் நடத்திய விசாரணையில், டெலிகிராம் மூலமாக எளிதில் பணம் சம்பாதிப்பது குறித்து தேடி வந்தபோது, இருவரையும் இந்தியல் பேசி தொடர்பு கொண்ட மோசடி கும்பல், வங்கிக் கணக்கு தொடங்கி கொடுத்தால் ரூ.1 லட்சம் பணம் கொடுப்பதாக தெரிவித்ததால், இவர்கள் இருவரும் தங்களது விவரத்தை கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்கி கொடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரை யும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நாகை கிளை சிறையில் அடைத்தனர்.