துப்பாக்கி சூட்டில் சிறுவன் உட்பட 2 பேர் காயம்: ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது


உதயகுமார், கிஷோர், மாரிச்​சாமி

மதுரை: குடும்​பத் தகராறு பங்​காளிச் சண்​டை​யாக மாறிய விவ​காரத்​தில் துப்​பாக்​கி​யால் சுட்​டத்​தில் சிறு​வன் உட்பட 2 பேர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக ஓய்​வு​பெற்ற எல்​லைப் பாது​காப்பு படை வீரரை போலீ​ஸார் கைது செய்​தனர். மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் அரு​கே​யுள்ள டி. பாறைக்குளத்தைச் சேர்ந்த முத்து மகன்​கள் மருது​பாண்டி (45), உதய​கு​மார் (40), மணி​கண்​டன் (35).

முத்​து​வின் தம்பி கருணாநி​தி​யின் மகன் மாரிச்​சாமி (40). இவர் எல்​லைப் பாது​காப்​புப் படை​யில் பணிபுரிந்து ஓய்​வு​பெற்​றவர். இவர்​கள் பாறைக் குளத்தில் அரு​கருகே வசிக்​கின்​றனர். இவர்​களுக்​குள் சொத்து மற்​றும் பணம், கொடுக்​கல் வாங்​கலில் பிரச்​சினை இருந்​தது.

இந்​நிலை​யில், நேற்று மணி​கண்​டன் அவரது மனைவி மல்​லிகா இடையே பிரச்​சினை ஏற்​பட்​டது. இரு​வரும் வீட்​டுக்கு வெளியே வந்​து, ஒரு​வரையொரு​வர் திட்​டிக்​கொண்​டனர். இதையறிந்த மாரிச்​சாமி முன்​பகை​யில் மனதில் வைத்து தன்​னைத் திட்​டு​வ​தாக மணி​கண்​டனை தட்​டிக் கேட்​டார். குடும்​பச் சண்டை பங்​காளி தகராறாக மாறியது.

அங்கு வந்த உதயகு​மார் சண்​டையை விலக்​கி​விட்​டார். இருப்​பினும், வீட்​டுக்​குள் சென்று துப்​பாக்​கியை எடுத்து வந்த மாரிச்​சாமி 5 முறை துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், சகோ​தரர் உதயகு​மாருக்கு விலா, வயிறு பகு​தி​யில் இரண்டு குண்​டு​கள் பாய்ந்து மயங்​கி​னார். தொடர்ந்து அவர் சுட்​ட​தில் அருகே கடைக்​குச் சென்ற கவியரசு மகன் கிஷோருக்​கும் (10) வலது கை தோள் பட்​டை​யில் காயம் ஏற்​பட்​டது.

தகவலறிந்த கூடக்​கோ​வில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்​று, துப்​பாக்கி சூட்​டில் காயமடைந்த உதயகு​மார், கிஷோரை மீட்டு மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். தொடர்ந்​து, மாரிச்​சாமியை போலீ​ஸார் கைது செய்​து, அவரது துப்​பாக்​கியைப் பறி​முதல் செய்​தனர்​.

x