ஆரணி அருகே கூடா நட்பு தகராறு: பெட்ரோல் குண்டு வீசியதில் 3 வயது குழந்தை படுகாயம்


கண்ணமங்கலம் அருகே கூடா நட்பால் ஏற்பட்ட தகராறில் காதலி மீது பெட்ரோல் குண்டு வீசியபோது தவறுதலாக 3 வயதுக் குழந்தை படுகாயம் அடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள விளாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜா (55). இவரது மனைவி ஜெயம்மாள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னபாப்பா (50) என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். அவருடன் கூலி தொழிலாளி ராஜாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது கூடா நட்பாக மாறியுள்ளது. இதற்கிடையில், சின்ன பாப்பாவின் மூத்த மகளுக்குத் திருமணமாகி சந்தவாசலில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மகள் வீட்டுக்கு சின்ன பாப்பா சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். இதனால், சின்ன பாப்பாவை தொடர்பு கொள்ள முடியாமல் ராஜா தவித்து வந்துள்ளார். பின்னர், சின்ன பாப்பாவை தொடர்புகொண்ட ராஜா, தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தவாசலில் மகள் வீட்டுக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை சின்ன பாப்பா நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்குச் சென்ற ராஜா, சின்ன பாப்பா மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அப்போது தவறுதலாக சின்ன பாப்பாவின் பேத்தி ஆஷிகா என்ற மூன்று வயது சிறுமியின் அருகில் பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்துள்ளது. இதில், தீக்காயம் அடைந்த குழந்தை அலறி துடித்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ராஜா அங்கிருந்து தப்பிய நிலையில், படுகாயம் அடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சந்தவாசல் காவல் ஆய்வாளர் மகா லட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், தப்பி ஓடிய ராஜாவை பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் தடயவியல் நிபுணர் சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

x