மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சூர்யா (21). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்த இவர், கடந்த 11ம் தேதி கோவை வெள்ளலூரில் கைவிடப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போத்தனூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இது தொடர்பாக, சூர்யாவின் நண்பர்கள் கார்த்திக் (21), மாதேஷ் (21), முகமது ரபி (21), நரேன் கார்த்திக் (21) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நேற்று கூறியதாவது: சூர்யாவும், கார்த்திக்கும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். கோவையில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தனர். பின்னர் சென்னையில் வேறு கல்லூரியில் படிக்க சூர்யா சென்றுவிட்டார். ஆனால், அவர் கார்த்திக் காதலித்துவந்த பெண்ணின் செல்போன் எண்ணை அறிந்து அவரிடம் நன்றாக பேசி, காதலை பிரித்துவிட்டார்.
பின்னர் சூர்யாவும் அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இதனால் கார்த்திக் ஆத்திரமடைந்து, சூர்யாவை கொல்ல திட்டமிட்டார். இதற்காக கடந்த 8ம் தேதி சூர்யாவை கோவைக்கு அழைத்தார். அதன்படி, போத்தனூர் போஸ்டல் காலனியிலுள்ள கார்த்திக் வீட்டுக்கு அவர் சென்றார். அங்கு கார்த்திக்கின் நண்பர்களான மாதேஷ், முகமது ரபி, நரேன் கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் 4 பேரும் சேர்ந்து சூர்யாவுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை குடிக்க கொடுத்தனர். அப்போது அவருக்கு போதை ஊசியையும் போட்டனர். அதில் மயங்கிய அவரை கை, கால்களை கட்டி தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தனர்.
4 பேரும் மதுபோதையில் இருந்ததால் சூர்யாவின் உடலை எப்படி அகற்றுவது என்பது தெரியாமல் இருந்தனர். அன்று இரவு முழுவதும் சடலத்துடன் படுத்து உறங்கினர். அதிகாலையில் எழுந்ததும், ஒரு காரில் உடலை ஏற்றி சம்பவ இடத்தில் வீசிவிட்டு தப்பினர். இவ்வாறு போலீஸார் கூறினர்.