தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரிடம் புகார் அளித்தார். சபரிராஜன் உட்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சபரி ராஜன், வசந்த குமார், சதீஷ் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும், அந்த பெண் கதறுவதுமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, தனக்கும், இவ்வழக்கிற்கும் தொடர்பு இல்லை என வீடியோ வெளியிட்டார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியில் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.
திருநாவுக்கரசின் ஆப்பிள் போனை போலீஸார் கைப்பற்றினர். அதில், நூற்றுக்கணக்கான பெண்களின் வீடியோக்கள் இருப்பதை கண்டறிந்த னர். பின்னர், 5-வது குற்றவாளியான மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.
2019ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி நிஷா பார்த்திபன் வழக்கை விசாரித்தார். சபரி ராஜன் வீட்டில் சோதனை நடத்தியபோது லேப் டாப் கைப்பற்றப்பட்டது. சபரி ராஜன் லேப் டாப், திருநாவுக்கரசுவின் செல்போன் ஆகியவை முக்கிய மின்னணு ஆதாரங்களாக வழக்கில் சேர்க்கப்பட்டன. அதில் இருந்த வீடியோக்களை ஆய்வு செய்த போது, ஒரே பெண்ணை பல முறை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோவாக பதிவு செய்திருப்பது உறுதியானது.
2019ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ பல ரகசிய குழுக்களை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து விசாரித்தனர். வீடியோக்களில் இருந்த 20 பெண்களை கண்டறிந்து விசாரித்தனர். சபரிராஜன், சதீஷ்குமார், வசந்த ராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு மே 24ம் தேதியில் முதல்கட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.
மாக்கினாம்பட்டி அருகே உள்ள திருநாவுக்கரசின் சின்னப்பபாளையம் வீடு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ய பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த வீட்டில் சவுண்ட் புரூப் செய்யப்பட்டு, வீட்டிலிருந்து கத்தினால் சத்தம் வெளியே கேட்காதவாறு அறைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டிலிருந்து ஏராளமான ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன. சிபிஐ விசாரணையில், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவர் மீதும் 2021ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதியில் இரண்டாவது கூடுதல் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. பின்னர், 9-வது நபராக அருண் குமார் கைது செய்யப்பட்டார். அருண் குமார் கைது தொடர்பாக 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று மூன்றாவது கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 48 சாட்சிகளிடம் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப் பட்டது. மின்னணு பொருட்கள் இவ்வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. அதில் பதிவான காட்சிகள் குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவற்றை கண்டறிய முக்கிய சாட்சியாக இருந்தது. ‘டிஎன் 41 அட்டாக் பாய்ஸ்’ என்ற பெயரில் இவர்கள் வாட்ஸ் அப் குழு தொடங்கி, பெண்களின் வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
வழக்கின் தன்மை கருதி கைதான 9 பேருக்கும் பிணை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட 8 பெண்களில் 7 பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்க மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள், சாட்சி என யாரும் பிறழ் சாட்சியாக கடைசி வரை மாறவில்லை. விசாரணை முழுவதும் சிபிஐ கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் நடைபெற்றது.
ஏறத்தாழ 1,500 பக்கங்களில் சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளிடம் மொத்தம் 236 கேள்விகள் கேட்கப் பட்டு, அவை பதிவு செய்யப்பட்டன. நேற்று (13.5.2025) இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.