வேப்பனப்பள்ளி அருகே செல்போன் கடையில் சிபிஐ சோதனை: பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது


சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய வேப்பனப்பள்ளி கொங்கானப்பள்ளி சாலையில் உள்ள செல்போன், சிம்கார்டுகள் விற்பனை கடையின் முன்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் போலீஸார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே செல்போன் கடை மற்றும் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக பொறியியல் பட்டதாரியை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. இவரது மகன் சதாசிவம் (25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும் ஆன்-லைன் பணப் பரிமாற்றம் செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சிகரமாகனப்பள்ளி கிராமத்தில் உள்ள சதாசிவம் வீடு மற்றும் அவரது கடையில் பெங்களூரு சிபிஐ காவல் துணை கண்காணிப்பாளர் சாய் கிரண் தலைமையில் டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் 2 பிரிவாக சோதனை நடத்தினர். இச்சோதனை மாலை 5.30 மணி வரை நடந்தது.

இதில், கடையில் இருந்து மடிக்கணினி, 3 செல்போன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், சதாசிவத்தை கைது செய்து விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள், வேப்பனப்பள்ளி போலீஸார் மற்றும் சதாசிவத்தின் குடும்பத்தினருக்கும் கைது அறிவிப்பு கடிதத்தை வழங்கினர்.

இதுதொடர்பாக சதாசிவத்தின் குடும்பத்தினரிடம் சிபிஐ அலுவலர்கள் கூறும்போது, “கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சதாசிவம் கடைக்கு வந்த மர்ம நபர் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த எண் மூலம் பல்வேறு மோசடி பணப் பரிவத்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் தேடுதல் உத்தரவு பெற்று இன்று (நேற்று) சதாசிவத்தை விசாரணைக்காக கைது செய்துள்ளாம்” என்றனர்.

x