மதுரை: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என்று மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டில் கடந்த 2-ம் தேதி நடந்த சைவ சமய மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார். உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனம் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக அவர் பேசியபோது, “தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக” கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸார் விபத்து தொடர்பான சிசிடிவி பதிவு காட்சிகளை வெளியிட்டு விளக்கமும் அளித்தனர்.
இந்நிலையில் இயல்பாக நடந்த சாலை விபத்தை மாற்றி இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக ஆதீனம் பேசியதாகவும், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம், அவரின் ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் அந்த அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘செங்கல்பட்டுக்கு மதுரை ஆதீனம் சென்றபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. அவரை கொல்ல முயன்றதாக கூறி தவறான தகவல்களை பரப்பி, இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளனர். இது தொடர்பாக ஆதீனம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்,’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.