திருச்செந்தூரில் நகைக்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர், வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஸ்ரீதேவ் (8) மற்றும் இரண்டே முக்கால் வயதில் ஆதிரா ஆகிய 2 குழந்தைகள். பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீ தேவ் முக்காணியில் உள்ள பெரியசாமியின் பெற்றோர் வீட்டில் உள்ளார். இந்நிலையில் பார்வதி, குழந்தை ஆதிராவுடன் நேற்று மாலையில் வீட்டில் படுத்திருந்தார்.
அப்போது கறுப்பு சட்டை, கண்ணாடி அணிந்த மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து, குழந்தையின் கழுத்தை நெரித்தவாறு பார்வதியிடம் தாலி செயினை தருமாறு கேட்டுள்ளார். இதில் பயந்துபோன பார்வதி தனது கழுத்தில் கிடந்த செயினை கழுற்றி கொடுத்துள்ளார். அப்போது திடீரென குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருக்கவே அந்த மர்ம நபர் குழந்தையையும், செயினையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி, குழந்தையை பார்த்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்து குழந்தையை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், தாலுகா ஆய்வாளர் இன்னோஸ் குமார் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். நகைக்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.