ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல் - திருவாரூரில் 4 பேர் கைது


தஞ்சாவூரில் இருந்து கோயில்வெண்ணி வழியாக திருவாரூருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தப் படுவதாக நீடாமங்கலம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோயில்வெண்ணி சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பொட்டலங்களில் 110 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுவதைக் கண்டு பிடித்தனர். ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்ட நாயக்(38), மார்சல் டெரான்ஸ் ராஜா (40) ஆகியோரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் வேதாரண்யம் ஆய்காரன்காடு பெரிய குத்தகை கிராமத்தைச் மு.முனீஸ்வரன், தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் நடுத் தெருவைச் சேர்ந்த நா.குமார் ஆகியோர் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் அறிவுறுத்தலின் படி ஆம்புலன்ஸில் வந்த 2 பேரும், முனீஸ்வரன், குமார் ஆகியோரை சோதனைச் சாவடிக்கு வந்து கஞ்சாவை பெற்றுச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து, அங்கு வந்த 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

x