மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஆண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த டி.வைத்திலிங்கம் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த 2018ம் ஆண்டு முதுநகர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சுதாகர் என்பவருக்கும், சண்முகம் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறை ஊராட்சி துணைத் தலைவர் என்ற முறையில் சமரசம் செய்து வைத்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் சுதாகர், என் இருசக்கர வாகன சாவியை பறித்து, சண்முகத்தை அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்றார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் ஏழுமலை, என்னை வலுக் கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சட்ட விரோத காவலில் வைத்ததோடு, அவதூறாக பேசி, என் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக கடலூர் காவல் கண்காணிப் பாளருக்கு மனு அளித்த போதும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை இல்லை. எனது வாகனமும் திருப்பி வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன், மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலரிடம் இருந்து வசூலிக்க பரிந்துரைத்து உத்தரவிட்டார்.