காவிரிப்பாக்கம் அருகே இளைஞரை திட்டமிட்டு கொலை செய்த ரவுடி காவல் நிலையத்தில் சரண்


மனைவியுடன் கூடாநட்பில் இருந்த உறவுக்கார இளைஞரை திட்டமிட்டு கொலை செய்த பிரபல ரவுடி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம் வெப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி லூவியரசன் (34). இவரது மனைவி கீர்த்தனா (26). தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே, லூவியரசன் மீது காஞ்சிபுரம், அரக்கோணம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

இந்நிலையில், சமீப நாட்களாக லூவியரசன் மனைவி கீர்த்தனா மற்றும் உறவுக்கார இளைஞரான அருண் குமார் (26) என்பவரின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்து வந்தது. இதனை லூவியரசன், இருவருக்கும் தெரியாமல் கண்காணித்து வந்தார். இறுதியாக கீர்த்தனா மற்றும் அருண் குமார் இருவரும் கூடா நட்பில் இருப்பது லூவியரசனுக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த லூவியரசன் உறவுக்கார இளைஞரான அருண் குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு லூவியரசன் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு வந்துவிடலாம் எனக் கூறி அருண்குமாரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். தொடர்ந்து, ஆலப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி பகுதிக்கு அழைத்துச்சென்று அருண் குமாரின் கழுத்தை நெரித்தும், தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் அவரது உடலில் கழுத்து மற்றும் முகத்திலும் குத்தி கொலை செய்தார்.

தொடர்ந்து, நள்ளிரவில் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் தானாக சென்று கொலை செய்து விட்டதாக காவல் துறையினர் முன்னிலையில் லூவியரசன் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று, உயிரிழந்த அருண்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து லூவியரசனை காவல் துறையினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

x