உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி மதுரை ஆதீனம் கடந்த 2ம் தேதி காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சேலம் ரவுண்டானா பகுதியை கடந்து செல்ல முயன்ற நிலையில் கார் மீது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 2 கார்களுக்கும் லேசான சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம், உளுந்தூர்பேட்டை பகுதியில் காரை ஏற்றி, தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, சிசிடிவி காட்சியை வெளியிட்டு, இது விபத்துதான் என்று கூறியது. மதுரை ஆதீனம் சென்ற காரை, அதன் ஓட்டுநர் செல்வகுமார் அதிவேகமாக ஓட்டி சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறி, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஓட்டுநர் முபாரக் அலி கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸார் கடந்த 5ம் தேதி இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் செல்வக்குமாரை, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தனிப்படை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். மாலையில் தொடங்கிய விசாரணை, சுமார் 5 மணிக்கு நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது அவரிடம், விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.