சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக 2,294 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை காவல்துறையினர் தொடங்கினர்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள், பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வரும் மாநகர எல்லையான கடச்சனேந்தல் பிரிவில் இருந்து எதிர்சேவை நடக்கும் தல்லாகுளம், வைகை ஆற்றில் சுவாமி இறங்கும் பகுதி வரையிலுள்ள சாலைகள், முக்கிய சந்திப்புகள் என சுமார் 1057 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தல்லாகுளம் பெருமாள் கோயில் முதல் வைகை ஆற்றுப் படுகை வரையிலும் 266 கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி நேற்று தொடங்கியது.
இவ்வாண்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ‘ கியூ ஆர் ’ கோடு அடிப்படையில் மக்கள் குறைதீர்க்கும் அமைப்பின் மூலம் இன்று ( மே 8) முதல் 12-ம் தேதி வரை ‘வைகை வீரன்’ என்னும் பெயரில் கியூ ஆர் ஸ்கேன் ரீடரில் மக்கள் காவல் உதவியை அணுகவும், புகார் அளிக்கவும் நகரில் முக்கியமாக 200 இடங்களில் கியூ ஆர் குறியீடு சுவரொட்டிகள் நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன.
மக்கள் எந்த இடத்தில் இருந்தும் காவல் உதவியை நாடலாம். புகார் கொடுக்க குறியீட்டை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து, செல்போன் எண் மற்றும் கியூ ஆர் ஸ்கேன் மேல் கொடுத்த எண்ணை தட்டச்சு செய்து அல்லது குரல் பதிவு, எழுத்து, குறுஞ் செய்தி மூலம் புகார் தெரிவிக்கலா ம். இத்தகவல் காவல் கட்டுப்பாட்டு அறை, தொடர்புடைய காவல் ஆய்வாளர், உதவி ஆணையர், துணை ஆணையர் , காவல் ஆணையர் ஆகியோருக்குச் சென்றடைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தல்லாகுளம் - வைகை ஆற்றுப் படுகை வரை 91 கேமராக்கள் அதி நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் பொருத்தி கண்காணிக்க ப் படுகிறது. கூட்டம் அதிகரிக்கும் பகுதியில் சந்தேகம், குற்ற பின்னணி நபர்கள் கண்காணிக்கப்படுவர். தல்லாகுளம் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் 3 இடங்களில் 6 ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நெரிசல், இடையூறுகள் உடனே சரி செய்யப்படும்.
மீனாட்சி தேரோட்டத்தை முன்னிட்டு மாசி வீதிகளிலும் 165 கண்காணிப்பு கேமராக்கள் கோயிலை சுற்றிலும், சித்திரை வீதிகளில் 981 கேமராக்களும் பொருத்தி தயார் நிலையில் உள்ளன. இன்று நடக்கும் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்கும் பகுதியில் நெரிசல் மிகுந்த இடங்களில் பெண்கள் அணிந்துள்ள நகைகளைப் பாதுகாக்க 40 ஆயிரம் பாதுகாப்பு ஊக்குகள் காவல்துறை சார்பில் வழங்கப்படும்.
குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க, குழந்தைகளின் கைகளில் கைப்பட்டைகள் அணிவிக்கப்படும். குழந்தை பெயர், பெற்றோர், காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் ஆணையரின் அலுவலக பிரத்தியேக எண்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இதன்மூலம் காணாமல் போகும் குழந்தைகளை விரைந்து மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் திருவிழாவைக் காணவரும் மக்கள், இளைஞர்கள், பெண்கள், பக்தர்களுக்கு இடையூறு இன்றி விரும்பத்தகாத குறும்புச் செயல்களில் ஈடுபடாமல் அனைத்துத் தரப்பினரும் காவல்துறைக்கு ஒத்துழைக்கவேண்டும். தவறு பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.