தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 3 குழந்தைகள் நீராதாரங்களில் மூழ்கி இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீராதாரங்களில் குளிக்க தடை விதித்து, காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு, வைகை என 2 பிரதான ஆறுகளும், வராக நதி, கொட்டக்குடி உள்ளிட்ட வைகையின் துணை ஆறுகளும் உள்ளன. மேலும் பெரியாற்றின் குறுக்கே வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஏராளமான தடுப்பணைகள் உள்ளன. இதனால் இப்பகுதிகளிஸ் பொதுமக்கள் குளிப்பது வழக்கம். தற்போது தண்ணீர் வரத்தும், நீர் இழுவைத் திறனும் குறைவாக இருப்பதால் பலரும், இந்த இடங்களில் குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி வீரபாண்டி தடுப்பணையில் மூழ்கி போடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த ராம் குமார் என்பவரது மகன் வெற்றிவேல் செல்வன் (10) கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். 5-ம்தேதி சின்னசுருளி அருவியின் முன்புறம் உள்ள தடாகத்தில் மூழ்கி தேனி நாகலாபுரத்தைச் சேர்ந்த கேசவன் என்பவரது மகன் ராகேஷ் (10) உயிரிழந்தார்.
6-ம் தேதி கூடலூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் நிவேதா (16) லோயர்கேம்ப் முல்லை பெரியாற்று தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த 3 நாட்களில் நீர் நிலைகளில் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
சின்னச் சுருளியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரபாண்டி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விழா நடைபெறுவதால் தடுப்பணை அருகே உயர் கோபுரம் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொது மக்கள் நீராதாரங்களில் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அருவிகளில் வனத்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.