பழநி பகுதியில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட கூலித் தொழிலாளியைக் கொன்று அவரது வீட்டின் அருகே உடல் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழநியை அடுத்துள்ள சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துசாமி (32). இவரது மனைவி மாரியம்மாள் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர்களுடன் மாரியம்மாளின் அக்காள் வைதேகியும் (40) வசித்து வருகிறார். ஏப்.29ம் தேதி வெளியே சென்ற முத்துசாமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாரியம்மாள், பழநி தாலுகா போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இதற்கிடையே, மே 4-ம் தேதி வைதேகியும் திடீரென காணாமல் போனார். ஒரே வீட்டில் அடுத்தடுத்து இருவர் காணாமல்போன விவகாரம் அப்பகுதி மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை முத்துசாமியின் வீட்டின் அருகில் காலி இடத்தில் மண்ணுக்குள் எதையோ புதைத்தது போன்ற தடயம் இருந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீஸார் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க முடிவு செய்தனர். நேற்று மாலை 4 மணிக்கு பழநி வட்டாட்சியர் பிரசன்னா தலைமையில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் முன்னிலையில் தோண்டியபோது
அதில், முத்துசாமியின் உடல் இருந்தது. மருத்துவக் குழுவினரின் பிரேதப் பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துசாமியை கொலை செய்தது யார்? வைதேகி காணாமல் போனது ஏன்? என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.