கோவை: தண்டவாளத்தில் ”விளையாட்டு”க்காக கல் வைத்த 5 மாணவர்கள் கைது


படம்:ஜெ.மனோகரன்

சென்னையில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயில் ஏறியதும் கல் நொறுங்கியது.

இது குறித்து, இன்ஜின் ஓட்டுநர் கோவை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் தலைமையிலான ஆர்பிஎப் குழுவினர், சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், 18 வயது நிரம்பாதவர்கள் என்பதும் தெரியவந்தது. கான்கிரீட் கல்லை விளையாட்டுக்காக தண்டவாளத்தில் வைத்ததாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல, கடந்த 5ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் இரவு 8 மணியளவில் கோவை சிங்காநல்லூர்-பீளமேடு இடையே வந்த போது, திடீரென்று அந்த ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் ரயிலின் கண்ணாடி உடைந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரித்து, பீளமேட்டை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர்.

x