பள்ளிக்கரணை: தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றது என முன்னாள் அதிமுக அமைச்சர் பா.பெஞ்சமின் குற்றம்சாட்டியுள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி சென்னை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிக்கரணையில் இன்று ( மே 7-ம் தேதி) நடைபெற்றது.
சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லாமல் இருந்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது. பொது சுகாதார மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் கிடைப்பதில்லை.
அம்மா உணவகத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வயிறார உணவு உண்டுவந்தார்கள். குறிப்பாக கரோனா காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 8 மாதங்கள் மூன்று வேளை அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் வயிறார உண்டு தங்களது பசியை போக்கினார்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற வாக்கினை அம்மா உணவகத்தில் உணவினை உண்ட எழை எளிய மக்கள் வாழ்த்தியதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால் ஏழைகள் மகிழ்ச்சியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த திமுக அரசு அத்தகைய சிறப்புமிக்க அம்மா உணவகத்தை தற்போது மங்கிபோக வைத்துள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லுக்குட்டை, கே.பி.கே.நகர், துரைப்பாக்கம், பாண்டியன் நகர், கெனால் ஆகிய பகுதிகளில் பட்டா வழங்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அதே போல் பூர்வீகமாக குடியிருந்து வருகின்ற புழுதிவாக்கம், ஜல்லடன்பேட்டை ஆகிய பகுதிகளிலும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
அது மட்டுமின்றி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டிமுடிக்கப்பட்டு குடியிருக்கின்ற அந்த இல்லங்களுக்கெல்லாம் இன்றைக்கு முறையாக பட்டா வழங்கப்படவில்லை. கிரயப்பத்திரமும் வழங்கப்படவில்லை. அதோடு காலம் தாழ்த்தி கடுமையான நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்து கிரயப்பத்திரம் வழங்கப்படாத நிலையில் உள்ளது.
இன்றைக்கு தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றது. அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் வன்முறை மாநிலமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்றைக்கு மக்கள் திமுக ஆட்சியை அகற்ற தயாராகிவிட்டார்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள் உட்பட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.