காரைக்குடி: வங்கி பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் திடீர் மரணம் அடைந்தார். சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.
காரைக்குடியில் கல்லூரி சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு இரவு பகலாக சுழற்சி முறையில் ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை மானாமதுரை அருகே மாரநாட்டைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் மதன்குமார் (30) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
தகவலறிந்து அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, காவலர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாரா ? வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.