மதுரை: வீட்டுமனைக்கான பொட்டல் வரி ரசீது வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருப்பங்குன்றம் அருகிலுள்ள பாம்பன்சாமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்பகுதியிலுள்ள தனது பிளாட் ஒன்றில் வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக மனைக்கு பொட்டல் வரி செலுத்த ஹார்விபட்டியிலுள்ள மாநகராட்சி 99 வது வார்டுக்கான கணினி வரி வசூல் மையத்தை அணுகினார். அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சிவக்குமார் (42) ரூ. 9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் மதுரை லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் யோசனையின்படி நேற்று மாலை சிவகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பணம் கொடுக்க கார்த்திகேயன் சென்றார். ஹார்விபட்டியிலுள்ள டீக்கடை ஒன்றிற்கு வரவழைத்து அங்கு வைத்து ரூ.9 ஆயிரத்தை சிவக்குமார் வாங்கியுள்ளார். அருகில் மறைந்து இருந்த கூடுதல் டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் ரமேஷ் பிரபு, சூரியகலா, பாரதி பிரியா ஆகியோர் கையும், களவுமாக பிடித்து சிவகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.