விருதுநகரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சார் பதிவாளர், எழுத்தர் கைது!


விருதுநகர்: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கங்களின் சார் பதிவாளர், எழுத்தரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி‌.பட்டணத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (72). இவர் தேவகோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் வீடு கட்ட கடந்த 1982ல் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் 1990ல் தள்ளுபடியானது.

இந்நிலையில், கடன் ரத்து பத்திரம் பெறவும், அடகு வைத்த பத்திரத்தைத் திரும்பப் பெறவும் விருதுநகரில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்களின் சார் பதிவாளர் முருகனை (43) அணுகி உள்ளார். இதற்காக அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆரோக்கியசாமி இது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தனர். இதனை அலுவலக எழுத்தர் மோகன் (54) வாங்கியபோது அவரையும், சார் பதிவாளர் முருகனையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

x