கோவை: தெருவில் விளையாடிய சிறுமி மீது நாயை ஏவி கடிக்கவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
கோவை புலியகுளம் அருகேயுள்ள அம்மன் குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் பொன்வேல் (33) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹோட்டல் ஊழியரான இவருக்கு மனைவி, 5 வயதில் ஒரு மகள், 7 மாத கைக் குழந்தை உள்ளனர். மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். பொன்வேலின் பக்கத்து வீட்டில் செளமியா (50) என்பவர் வசித்து வருகிறார். செளமியா தனது வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார்.
கடந்த 3ம் தேதி பொன்வேலின் மகள், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சவுமியா இங்கு விளையாடக் கூடாது என கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த செளமியா தான் வளர்த்து வரும் நாய்களில் ஒன்றை வெளியே கொண்டு வந்து, சிறுமியை கடிக்கும்படி ஏவியுள்ளார். நாய் கடித்ததால் அலறிய சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது பற்றி செளமியாவிடம் பொன்வேல் கேட்டபோது, அவரும், மகன்களும் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, பொன்வேல் புகாரின் பேரில், செளமியா, மகன்கள் சூர்யா, சாந்தாராம், பிரகாஷ் ஆகியோர் மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். செளமியாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.