சென்னையில் முக்கிய பகுதியில் நடந்த பாலியல் தொழில்: ஒருவர் கைது; 2 பெண்கள் மீட்பு


சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். 2 பெண்கள் மீட்கப்பட்டனர்

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (05.05.2025) காலை, வில்லிவாக்கம், மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஹரிகிருஷ்ணன்(35), த/பெ.ராஜேந்திரன், விநாயகபுரம் மெயின் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (05.05.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

x