வத்திராயிருப்பு: கோட்டையூரில் விவசாயக் கிணற்றில் கர்ப்பிணி பெண் இறந்து கிடந்த வழக்கில், கணவரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிகுமார் (24). வாகன ஓட்டுநராக உள்ளார். இவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பூஜா (24) என்பவரை காதலித்து வந்தார். பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் 11 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது, பூஜா 6 வார கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோட்டையூரில் பாண்டிகுமாரின் தாத்தா நல்லு என்பவரின் கிணற்றில் இருந்து பூஜாவின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இது குறித்து பூஜாவின் தாய் ஜெய ஜோதி, பாண்டிகுமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பூஜா இறந்து விட்டதாக, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பூஜாவின் உடலை வாங்க மறுத்ததுடன், பாண்டிகுமாரை கைது செய்ய அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருமணமான ஓராண்டுக் குள் பூஜா உயிரிழந்ததால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.