வேலூர்: காட்பாடி அருகே ஒடிஷா இளைஞர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இளைஞர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காட்பாடி காவல் துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை காவல் கண்காணிப் பாளர் பழனி தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே நேரம், காட்பாடி ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காட்பாடி காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் ஒடிஷா மாநிலம் சுதர்சன்பூர் பகுதியைச் சேர்ந்த பாலபத்திரா எனும் பலியா (33) என்று தெரியவந்தது. இவர், வடுகன்குட்டை பகுதியில் உள்ள கொசு வலை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. தண்டவாளம் அருகே ரத்தக் கறையுடன் இருந்த கல் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
அவரை கொலை செய்தவர்கள் உடலை தண்டவாளத்தில் வீசிச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர், கொலையான பலியாவின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த 8 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.