சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மாணவிகளுக்கு ஆபாச புகைப்படங்கள்: பொறியியல் பட்டதாரி கைது


கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் இரு மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல்களும், மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் மர்ம நபர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அம்மாணவிகள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், சிதம்பரம் அருகே உள்ள சாலியன் தோப்பு பகுதியைச் சேர்ந்த நக்கீரன் (25) என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பொறியியல் பட்டதாரியான இவர், தற்போது கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். பள்ளி படிப்பிலிருந்து தன்னுடன் தோழியாக பேசி வந்த மாணவி, தன்னுடன் இனி பேச வேண்டாம் என்று கூறி புறக்கணித்ததால் அவர் ஆத்திரமடைந்தார்.

தனது பெண் தோழி மற்றும் அவரது தோழியையும் இணைத்து களங்கப் படுத்த திட்டமிட்டார். இதற்காக இன்ஸ்டா கிராமில் ஆபாசமான தகவல்களை பரப்பியதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நக்கீரனை கைது செய்தனர்.

x