தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்கு ரூ.3,000 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது


தூத்துக்குடி: பட்டா மாறுதலுக்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவர், சங்கரப்பேரி கிராமத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வி பெயரில் 4.5 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மனைவி இறந்துவிட்டதால் அந்த நிலத்தை தனது பெயருக்கும், தனது இரு குழந்தைகள் பெயருக்கும் கூட்டு பட்டா வழங்கக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலர் கணேச மூர்த்தி, மீண்டும் ஒரு முறை விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரபாகரன் கூட்டு பட்டா கேட்டு மீண்டும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார். இம்முறை அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டது. தனக்கு ரூ.3,000 லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி கேட்டுள்ளார். அந்த பணத்தை தருவதாக ஒப்புக் கொண்ட பிரபாகரன், இது தொடர்பாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் ரகசியமாக புகார் அளித்தார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அளித்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூ.3,000 பணத்தை நேற்று, தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து கணேச மூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை, ஆய்வாளர் அனிதா மற்றும் போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இது தொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x