ராமநாதபுரம்: திருவாடானை அருகே பெறுவாக்கோட்டையில் நிலத்தை அளக்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தை அளப்பதற்கு அவ்வூர் கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) அணுகினார். ரூ.4,000-ம் லஞ்சம் கொடுத்தால் வேலையை முடித்துத் தருவதாக கிராம நிர்வாக அலுவலர் கூறினார். அதில் ரூ.1,500-ஐ முன் பணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன் கிராம நிர்வாக அலுவலர் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத நில உரிமையாளர், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அறிவுறுத்தியபடி ரசாயனம் தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது, கிராம உதவியாளர் சித்ரா ஆகியோரை கைது செய்தனர்.