உத்தமபாளையம் வட்டாட்சியர் என ஏமாற்றி ரூ.1 லட்சம் மோசடி: இந்து முன்னணி நிர்வாகி கைது


வட்டாட்சியர் என ஏமாற்றி பட்டா மாறுதல் செய்து தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

போடி தேவாரம் அருகே எர்ணம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ் (34). கூலி தொழிலாளியான இவர், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பட்டா மாறுதல் சம்பந்தமாக சென்றிருந்தார். அப்போது, ஒருவர் தன்னை வட்டாட்சியர் என்று அறிமுகம் செய்துகொண்டு பட்டா மாறுதல் செய்து தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரபோஸ் 4 தவணைகளில் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், ஏமாற்றியவர் ராம்செல்வா (28) என்றும், இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

x