மூதாட்டியை கொன்ற பேரன் தலைமறைவு: கோவை அருகே பரபரப்பு


கோவை: சுந்தராபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜ் மனைவி மனோன்மணி (80). இவரது மகன் முருகேசன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில், இழப்பீட்டுத் தொகையாக ரூ.15 லட்சம் கிடைத்தது. அதில், முருகேசனின் மனைவி லட்சுமிக்கு ரூ.6 லட்சம், மூத்த மகன் சிவக்குமாருக்கு ரூ.1.50 லட்சம், 2-வது மகன் விஷ்ணுவுக்கு ரூ.1.50 லட்சம், தாய் மனோன்மணிக்கு ரூ.1.50 லட்சம் என கடந்தாண்டு இறுதியில் பணம் பிரித்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மனோன்மணிக்கு அளிக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என முருகேசனின் மூத்த மகன் சிவக்குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால், அதற்கு மனோன்மணி மறுத்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் கத்தியால் மனோன்மணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மனோன்மணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, வழியிலேயே மனோன்மணி உயிரிழந்து தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில், சுந்தராபுரம் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து தப்பியோடிய சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

x