சென்னை: மின்சார ரயிலில் பயணியிடம் செல்போன் திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் பரத் ராஜ்(27). இவர் நேற்று (மே 4) இரவு ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் வந்துகொண்டிருந்தார். இவர் சோர்வின் காரணமாக, தூங்கிவிட்டார். பின்னர் கண் விழித்து பரத்ராஜ் எழுந்தபோது, மின்சார ரயில் சென்ட்ரல் நிலையத்தை அடைந்திருந்தது. மேலும் அவரது செல்போன் மாயமாகி இருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அமர்ந்திருந்த இடத்தில் தேடினார். இருப்பினும் செல்போன் கிடைக்கவில்லை. இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அந்த செல்போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து கண்காணித்தபோது, பாரிமுனையில் இருப்பதாக காட்டியது .
இதையடுத்து, ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று, அந்த செல்போன் வைத்திருக்கும் நபரை பிடித்தனர். அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அந்த நபர் அரும்பாக்கம் என்எஸ்கே நகரைச் சேர்ந்த சஞ்சய் (26) என்பதும், ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பரத்ராஜ் செல்போனை திருடியதும் தெரியவந்தது, இதையடுத்து, அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.